குழந்தையை சேர்க்க மறுத்தால் தலைமை ஆசிரியருக்கு அபராதம்
"பள்ளியில், குழந்தைகளை சேர்க்க மறுக்கும் தலைமை ஆசிரியருக்கு முதல்
முறை 25 ஆயிரம் ரூபாயும், அதே தவறை மீண்டும் செய்தால் 50 ஆயிரம் ரூபாயும்
அபராதம் விதிக்கப்படும்' என, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்
முக்கிய அம்சங்கள், விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தை, பள்ளிக்கல்வி
அமைச்சர் சிவபதி, சென்னையில் நேற்று வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய
அம்சங்கள் வருமாறு:
* தலைமை ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கைக்காக நன்கொடை பெற்றால்,
கட்டணத்தின் தொகையைப்போல், 10 மடங்கு தொகை, தண்டனைத் தொகையாக
விதிக்கப்படும்.
* மாணவர்கள், தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, அவர்களிடம் எவ்விதமான கட்டணமோ, செலவின தொகையே பெறக்கூடாது.
* குழந்தையை சேர்ப்பதில் தாமதம் செய்து, பரிசீலனை செயல்முறையை தலைமை
ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்தினால், அவர்களுக்கு முதல் முறை 25 ஆயிரம்
ரூபாய் அபராதமாகவும், அதே தவறை மீண்டும் செய்தால், ஒவ்வொரு முறைக்கும் 50
ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
* மாணவர்களை மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது.
அப்படி செய்தால், சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்படும்.
* மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள், பேரிடர் நிவாரணப் பணிகள்,
தேர்தல் பணிகள், மாநில அரசால் வழங்கப்படும் இதரப் பணிகள் தவிர்த்து, கல்வி
அல்லாத இதர பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது. இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.