ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக 8 லட்சம் விண்ணப்பங்கள் : விண்ணப்பம் ரூ.50; தேர்வுக் கட்டணம் ரூ.500
மே இறுதியில் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, எட்டு லட்சம்
விண்ணப்பங்களை அச்சடிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விண்ணப்பத்தின் விலை, 50 ரூபாயாகவும், தேர்வுக் கட்டணம், 500 ரூபாயாகவும்
நிர்ணயிக்க, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரையிலான
ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வும், அதன் பின், ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் போட்டித் தேர்வும் நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் பயிற்சி
முடித்தவர்கள், இரண்டாம் ஆண்டு படிப்பவர்கள், பி.எட்., முடித்தவர்கள்
மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்களுடன், 2010, ஏப்., 1ம் தேதிக்குப் பின்
ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் அனைவரும், தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
5 லட்சம் பேர்; ரூ.27 கோடி வருவாய் : குறைந்தது, ஐந்து
லட்சம் முதல், அதிகபட்சம், ஆறு லட்சம் பேர் வரை தேர்வில் பங்கேற்பர் என
எதிர்பார்ப்பதாகவும், கடைசி நேரத்தில், விண்ணப்பங்கள் பற்றாக்குறை
ஏற்படக்கூடாது என்பதற்காக, எட்டு லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்க ஏற்பாடு
செய்துள்ளதாகவும், ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அனைத்து
மாவட்ட கல்வி அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில்,
விண்ணப்பங்களை விற்பனை செய்ய, தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
விண்ணப்பத்தின் விலை, 50 ரூபாயாகவும், தேர்வுக் கட்டணம், 500 ரூபாயாகவும்
இருக்கும் என்றும், தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஐந்து லட்சம்
பேர் விண்ணப்பித்தால் கூட, தேர்வு வாரியத்திற்கு, 27.50 கோடி ரூபாய்
வருவாய் கிடைக்கும்.
பாடத்திட்டம் : இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்
என, இரு பிரிவினருக்கு, தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு
பிரிவினருக்கும், தலா, 150 மதிப்பெண்களுக்கு, பதில் தேர்வு செய்யும்
முறையில் தேர்வு நடத்தப்படும். தமிழ், ஆங்கிலம், உளவியல், அறிவியல், சமூக
அறிவியல் ஆகிய ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், ஒவ்வொன்றில் இருந்தும் தலா,
30 மதிப்பெண்கள் வீதம், 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
இதில், தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களாக, 90
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விரைவில் ஒப்புதல் : பாடத் திட்டங்களுக்கு, தமிழக அரசிடம் ஒப்புதல்
கோரப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் ஒப்புதல் கிடைத்துவிடும் எனக்
கூறப்படுகிறது. அனுமதி கிடைத்ததும், தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை,
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.