விருதுநகர் மாவட்டத்தில், ஆசிரியருக்கு மாணவர்கள் கொலை மிரட்டல்
விடுத்ததால், பள்ளிகளில் அதிகாரிகள் மொபைல் போன் ரெய்டு நடத்தினர்.
பள்ளிகளில், மாணவர்களால், ஆசிரியருக்கு கொலை மிரட்டல் வருவதால், பாதுகாப்பு
கேட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் ஆசிரியர்
கண்டிப்பால், மாணவர் தற்கொலை சம்பவங்களும் அரங்கேறுகின்றன. மாணவர்களில்
பலர், பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்துவதாக புகார் வந்தது.
இதை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்களிடம் மொபைல் போன்
உள்ளதா என்பது குறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் சசிகலா தலைமையில்,
வீரார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இங்கு
மொபைல் போன்கள் எதுவும் சிக்கவில்லை.
முதன்மைக் கல்வி அலுவலர், ""இணையதளத்தில் படங்கள் டவுன் லோடு
செய்து, மொபைல் போனில் பார்ப்பதாகவும், மொபைல் போன்களால் தான் பிரச்னைகள்
ஏற்படுகிறது எனவும் புகார் வந்தது. பெற்றோர், மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டும் என்பதால், திடீர் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இது
தொடரும். பள்ளியில் மொபைல் போன் பயன்படுத்துவது தெரிந்தால், கடும்
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.