அனைத்து தொடக்கப் பள்ளிகளில் 28ம்தேதி அறிவியல் கண்காட்சி
வரும் 28ம் தேதி, தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி, அனைத்து தொடக்க,
நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்த வேண்டும் என,
அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அதன் இயக்குனர்
உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கக் கல்வி இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒரு நாட்டின்
வளர்ச்சி அந்த நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பொறுத்தே
அமைகிறது. தொடக்கக் கல்வித் துறையில் பயிலும் இளம் மாணவர்களிடையே அறிவியல்
வேட்கையையும், அறிவியல் மனப்பான்மையையும், வளர்க்க வேண்டியது ஆசிரியரின்
கடமை.
குழந்தைகள் இளம்பருவத்தில் அறிவியலின்பால் ஏற்படும் ஈடுபாடு அவர்களை
உலகின் மிகச்சிறந்த அறிவியல் மேதைகளாக உருவாக்குவதற்கு அடித்தளமாக
அமையும். இதை நிறைவேற்றும் வகையில், வரும் 28ம்தேதி தேசிய அறிவியல் தினத்தை
ஒட்டி, தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில்
பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்த வேண்டும். இது தொடர்பான அறிவுரையை
உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்
அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.